ஏஞ்சலிஸ் மாஸ்ட்ரெட்டா

Eyes
உலகிலேயே மிகக் கச்சிதமானத் தொப்புளைக் கொண்டிருந்தாள் லியோனார் அத்தை: அவளது தட்டையிலும் தட்டையான வயிற்றின் மிகச் சரியான மையத்தில் மறைவாக இருந்த ஒரு புள்ளி. தேமல்களுடைய முதுகையும், குழந்தையாக அவள் இருந்த போது அவள் அருந்திய நீரைக் கொண்டிருந்த கூஜாவைப் போல் திரண்ட இறுக்கமான இடுப்பையும் அவள் பெற்றிருந்தாள். அவளது தோள்பட்டைகள் சற்றே மேலெழும்பியிருந்தன,அவள் மெல்லென நடந்தாள், ஏதோ கம்பி மீதிருப்பதைப் போல. அவள் கால்கள் நீளமானவையாகவும் பொன்னிறத்தவையாகவும், அவளது யோனியின் மேற்புறத்து மயிர் ஒரு நிமிர்ச்சியான மயிர்த்திரளாகவும், செந்நிறமென்மேடாகவும் இருந்தன என்றும், அவள் இடையை அவளை முழுமையாக இச்சிக்காமல் பார்ப்பது என்பது அசாத்தியமானதாக இருந்தது எனவும் அவற்றைக் கண்டவர்கள் சொல்லுவர்.
அவள் தனது பதினேழாம் வயதில், தன் அறிவை அனுசரித்து, அறிவுள்ள ஒருத்தி தன் வாழ்நாள் முழுவதும் தன்னோடு துணையாக உடன் வரத்தக்க ஒருவனாக தேர்ந்து கொள்ளத் தகுந்த, மிகப் பொருத்தமான ஆளாக இருந்த ஒருவனை மணந்து கொண்டாள். ஆல்பெர்டோ பலாசியோஸ், பதினைந்து வருடங்களும், முப்பது சென்டிமீட்டர் உயரமும், அதற்கு சமவிகிதத்தில் அவள் மீது அனுபவமும் கொண்ட ஒரு செல்வந்தனான, கண்டிப்பு மிகுந்த பத்திர அதிகாரி. பல சலிப்பூட்டும் பெண்களின் காதலனாக அவன் இருந்திருக்கிறான். திருமணம் குறித்து ஆலோசிக்கையில் அவன், நீண்டகாலத் திட்டம் ஒன்றையே கருத்தில் கொண்டிருந்ததைக் கண்டு கொண்டபோது அந்தப் பெண்கள் மேலும் களைத்துப் போயினர்.
எளிதாக இருந்திருக்க வேண்டிய, ஆனால் சமீபத்தில் இறந்து போன லியோனார் அத்தையின் தந்தை, தன் மனைவியை அவளது வாழ்நாளில் ஒரு அரைமணி நேரம் கூட சுயமாகச் சிந்திக்க அனுமதித்திருக்கவில்லை என்ற காரணத்தினால் மிதமிஞ்சிய சிக்கலாகிவிட்ட ஒரு வாரிசு உரிமை விவாகாரம் சம்பந்தமான சட்ட நடவடிக்கைக்காக, ஒரு மதியவேளையில் தன் தாயின் துணையோடு பத்திர அலுவலகத்தற்குள் விதிவசமாக நுழைந்தாள் லியோனார் அத்தை. அவள் தந்தைத் தன் மனைவிக்காக மளிகைக்கடைக்கு செல்வதையும், சமைப்பதையும் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தார். செய்தித்தாள்களிலுள்ள செய்திகளை அவளுக்காகத் தொகுத்து, அதைப்பற்றி அவள் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதைச் சொல்வார். அவளுக்கு எப்போதும் ஒரு கணிசமான தொகையை செலவுக்கென தந்தார். அவள் அதை எப்படி செலவு செய்தாள் என்று கேட்டதே இல்லை. அவர்கள் சேர்ந்து காணச் சென்ற திரைப்படங்களில் என்ன நிகழ்கிறது என்பதைக் கூட அவர் சொன்னார் “பார் லூயிஸ்ட்டா, இந்தப்பையனுக்கு அந்தப்பெண் மேல் காதல். பார் அவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்! பார்த்தாயா? இப்போது அவன்,அவளைத் தழுவிக் கொள்ள ஆசைப்படுகிறான், தழுவிக் கொள்கிறான் இப்போது, இப்போது அவன் அவளைக் கல்யாணம் செய்துக் கொள்ள சொல்லி கேட்கப் போகிறான். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு அவளைக் கைவிட்டு விடப்போகிறான்.”
தந்தைத்தனமான இந்த சீராட்டலின் விளைவாக, லியோனார் அத்தையின் தகப்பனாக எப்போதும் இருந்த அந்த ஆதர்ச மனிதனின் திடீர் இழப்பு. பேதை லூயிஸ்ட்டா அத்தைக்கு பெரும் மனக்கவலையைத் தந்ததோடு, தீவிர சிக்கலாகவும் ஆகிவிட்டதை அவள் கண்டாள். இந்தத் துக்கத்துடனும், சிக்கலுடனும்தான் உதவி தேடி பத்திர அதிகாரியின் அலுவலகத்திற்கு வந்தனர். பத்திர அதிகாரி பலாசியோஸ் பெரும் அக்கறைக் கொண்டவனாயும், காரியமாற்றும் திறன் படைத்தவனாகவும் இருப்பதை அவர்கள் கண்டனர். எனவேதான், துக்க அனுஷ்டிப்பில் இருந்த போதும் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு அவனை லியோனார் அத்தை திருமணம் செய்து கொண்டாள்.
அதன்பின், எப்போதும் அவள் வாழ்க்கை முன்பு இருந்தது போல அவ்வளவு எளிதாக இருக்கவே இல்லை. நுட்பமான அந்த ஓரே தருணத்தில் மட்டும் அவள் தன் தாயின் அறிவுரையை பின்பற்றினாள்:”‘மரியே வாழ்க’ என்று சொல்லிக்கொள்”. நிஜத்தில் பல “மரியே வாழ்க” வாழ்த்துக்கள். ஏனெனில், ஏதோ காரணத்தால் முன்கூட்டியே எதிர்பார்த்தோ, அன்றியோ அவளது குறுகிய மெல்லிடையின் மீது அவன் தன் கைகளை வைத்த நேரத்தில், தவிர்க்க முடியாமல், ஆரம்பிக்கும் தொடர்சியான முக்கல் முனகல்கள் தொடங்க ஆரம்பிக்கும் களியாட்டத்தின் உச்சத்தை எட்டுவதற்கு முன்பாக,சமயங்களில் அவளது வெட்கங் கெட்டக் கணவன் ஜெபமாலையின் பத்து சுற்றுக்கள் ஆகும் அளவுக்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டான்.
இருபத்தைந்து வயதிற்குட்பட்ட ஒரு பெண் விரும்பியிருக்கக் கூடிய எல்லாவற்றையும் லியோனார் அத்தைக் குறைவின்றிப் பெற்றிருந்தாள்: தொப்பிகள், முகத்திரைகள், ஃப்ரெஞ்ச் காலணிகள், ஜெர்மானிய தட்டுமுட்டுப் பாத்திரங்கள் ஒரு வைர மோதிரம், ஓர் ஈடு இணையற்ற முத்து மாலை, நீல பச்சை ரத்தினக் கல், பவளம் மற்றும் சித்திர வேலைப்பாடுகள் செய்த காதணிகள். திரியத்துவ மார்க்க கன்னியாஸ்திரிகளால் சித்திரத் தையல் செய்யப்பட்ட உள்ளாடைகள் முதற்கொண்டு இளவரசி மார்க்கெரெட்டின் கிரீடம் போலவே இருந்த ஒன்றுவரையிலான சகலமும். அவள் விருப்பப்படக் கூடியவை எல்லாம் அவளுக்குக் கிடைத்தன, அவளது கணவனின் அர்ப்பணிப்பு உட்பட, இந்தப் பெண் மட்டும் இல்லாத வாழ்க்கை சகிக்கமுடியாத ஒன்றாக இருக்கும் என்பதை அவன் சிறுகசிறுக உணர ஆரம்பித்தான்.
பத்திர அதிகாரி, வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முறையாவது அரங்கேற்றிய அன்பில் தோய்ந்த களியாட்டங்கள் மூலமாக லியோனார் அத்தையின் வயிற்றில் முதலில் ஒரு பெண்ணும் பின்னர் இரண்டு பையன்களும் உருப்பெற்றனர். திரைப்படங்களில் மட்டுமே நிகழ்வது போல, மூன்று முறையும் லியோனார் அத்தையின் வயிறு வீங்கி பின் தட்டையாக வடிந்தது, புலப்படக்கூடிய புற பாதிப்புகள் எதுவும் இன்றி. இத்தகைய அற்புதத்திற்கு அத்தாட்சி கூறும் வகையாக ஒரு சான்று பத்திரத்தை எழுத பத்திர அதிகாரி விருப்பப்பட்டாலும் கூட தேடல் ஆர்வமும் காலமும் அவன் மனைவிக்கு அருளியிருந்த பணிவும், சாந்தமும் சிரத்தையுமான ஊக்கத்தின் உதவியோடு அதை வெறுமனெ சந்தோஷித்து அனுபவிப்பதோடு நிறுத்திக் கொண்டார். களியாட்டம் நேர்த்தியாக ஆகத் தொடங்கியிருந்தது. லியோனார், கையில் ஜெபமாலையோடு அதை அனுபவிப்பதை நிறுத்திவிட்டிருந்தது மட்டுமன்றி அதற்காக அவனுக்கு நன்றி சொல்லவும் ஆரம்பித்தாள். பின்னர் ஆழ்ந்து உறங்கிப் போனாள், அன்றைய தினம் முழுக்க நிலைத்திருந்த புன்னகையோடு.
இந்தக் குடும்பத்திற்கு, வாழ்க்கை இதைவிடச் சிறப்பாக இருந்திருக்க முடியாது. மக்கள் எப்போதும் அவர்களைப் பற்றி நல்லவிதமாகவே பேசினர். அவர்கள் ஒரு ஆதர்ச தம்பதியராக இருந்தனர். திரு.பலாஸியோஸ் அதிர்ஷ்டக்காரியான லியோனாருக்கு அளித்து வந்த கனிவிற்கும், ஆதரவிற்கும் அதைக் காட்டிலும் சிறந்த உதாரணத்தை அக்கம்பக்க வீட்டுப் பெண்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது கணவர்கள், தாம் கடும் சினம் கொண்டிருந்த சமயங்களில், திருமதி பலாசியோஸின் சாந்தமான புன்னகையை மானசீகமாக உருவகித்துக் கொண்ட அதே சமயம் அவர்களுடைய மனைவியர் கூட்டாக, பிலாக்கணங்களின் பிரார்த்தனையை கோர்த்தனர்.
ஒருவேளை, எல்லாம் இதே ரீதியில் போய்க் கொண்டிருந்திருக்கக் கூடும், ஒரு ஞாயிறு அன்று லியோனார் அத்தைக்கு மெட்லெ(ர்) பழங்கள் வாங்க வேண்டும் என்று தோன்றாமல் போயிருந்தால். அவளது ஞாயிற்றுக் கிழமை சந்தை விஜயங்கள் ஒரு சந்தோஷகரமான, ஏகாந்தமான சடங்காக ஆகியிருந்தன. முதலில் எந்தப் பழத்திலிருந்து எந்த நிறம் வந்தது என பகுத்துணர முற்படாமல், தக்காளிக் கடைகளை எலுமிச்சை விற்ற கடைகளோடு ஓருசேரக்கலந்து அந்த மொத்த இடத்தையும் ஒரு பார்வை பார்த்தாள். நீல டாகோ (மெக்ஸிகன் மாமிச பலகாரம்)வைச் செய்து கொண்டிருந்த, தனது நூறு வயதை வெளிக்காட்டிக் கொண்டிருந்த, ஒரு கனத்த சரீர பெண்மணியிடம் செல்லும் வரை நிற்காமல் நடந்தாள், லியோனார்டிகா. மண்ணாலான சப்பாத்திக் கல்லிலிருந்து பாலாடைக் கட்டி நிரம்பிய டாகோ ஒன்றை எடுத்து, கவனமாக சிறிது சிகப்பு நிறத்திலிருந்தக் குழம்பை அதன் மேல் ஊற்றிக் கொண்டாள். பிறகு மளிகைப்பொருட்கள் வாங்கியபடியே மெதுவாக அதை சுவைத்தாள்.
மெட்லெ(ர்) ஒரு ஆழ்மஞ்சள் நிறமும், வெல்வெட் போன்ற தோலையும் கொண்ட ஒரு சிறிய பழம். சில கசப்பவை சில இனிப்பவை. கருத்த இலைகள் கொண்ட ஒரு பெரிய மரத்தின் கிளைகளில் அவை கொத்துகொத்தாகக் காய்க்கும். பின்னிய சடையுடன், பூனை போல துறுதுறுவென சிறுமியாக அவள் இருந்த காலத்தில், பல மதிய வேளைகளில் லியோனார் அத்தை அவளது தாத்தா,பாட்டி வீட்டில் மெட்லெ(ர்) மரங்கள் மீது ஏறியிருக்கிறாள். விரைவாக சாப்பிடவென்று அங்கே உட்கார்ந்திருப்பாள்:கசப்பானது மூன்று, இனிப்பானது ஒன்று, ஏழு கசப்பானது, இரண்டு இனிப்பானதுþசுவைகளின் தேடலும், கலவையும் ஒரு ருசிகரமான விளையாட்டாக ஆகும்வரை. மரம் ஏறுவதிலிருந்து சிறுமிகள் தடை செய்யப்பட்டிருந்தனர். ஆனால் பிஞ்சில் பழுத்த கண்களும், மெலிந்த உதடுகளும் தீர்க்கமான குரலும் கொண்டிருந்த சிறுவனான அவளது உறவினன் செர்ஜியோ, கேள்விபட்டிராத ரகசிய சாகசங்களுக்கெல்லாம் அவளைத் தூண்டினான். அவற்றுள் மிக எளிதாக இருந்த ஒன்று மரம் ஏறுவது.
அவள் மெட்லெர்களைச் சந்தையில் கண்டாள். அவை விநோதமாக இருந்தன; மரங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டு, ஆனாலும் முழுக்க அதனின்று பிரிந்து நிற்காமல். ஏனெனில், மெட்லெர்கள் இலைகள் நிறைந்த, மிக மென்மையான கிளைகளிலிருந்துதான் இன்னமும் வெட்டி எடுக்கப்படுகின்றன.
அவற்றை அவள் வீட்டிற்கு கொண்டு சென்றாள். அவளுடைய குழந்தைகளை கீழே அமர்த்தினாள் சாப்பிட வைக்க. அதே நேரம் தன் பாட்டனாரின் வலிமையான கால்கள் மற்றும் பாட்டியின் மொந்தை மூக்கு பற்றிய கதைகளை அவர்களுக்குச் சொன்னாள். சிறிது நேரத்தில் அவள் வாய், வழவழப்பான கொட்டைகளாலும் பட்டுப் போன்ற பழத்தோல்களாலும் நிரம்பி வழிந்தது. பின் திடுமென்று பத்துவயதானவளாய் இருந்த பிராயம் திரும்பி வந்தது. அவனுடைய வேட்கை மிகுந்த கைகள், செர்ஜியோ மீதான அவளது மறந்து போயிருந்த ஆசை, மரத்தின் மேலே அவளைப் பார்த்து கண் சிமிட்டியது.
பெற்றோரின் உடன் பிறந்தவர்களின் மக்கள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது, ஏனென்றால் குடிகாரர்களைப் போலத் தோற்றம் தரும் குழந்தைகளைப் பிறக்கச் செய்து கடவுள் அவர்களைத் தண்டிப்பார் என்று அவர்கள் அவளிடம் சொன்ன நாளில், அவளிலிருந்து ஏதோ ஒன்று பிய்த்து எறியப்பட்டு விட்டிருந்தது என்பதை அப்போது தான் அவள் உணர்ந்தாள். அதன்பின் அவளால் கடந்துபோன நாட்களுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. அப்போதிலிருந்து, இந்த சொல்லவொண்ணாத, கடந்த காலத்திற்கான திடீர் ஏக்கம் அவளது மதியப் பொழுதுகளின் சந்தோஷத்தை முடக்கிப் போட்டது.
அவளுடைய குழந்தைகள் மழையில் காகிதப் படகுகள் விடும் சமயத்திலான அவளது பரிபூரண அமைதி, உதார குணமும் கடும் உழைப்பும் கொண்ட அவள் கணவனின் தயக்கமின்றி பொழியும் நேசம் இவற்றோடு þஅவளது கனகச்சிதமான தொப்புளை அதிரச் செய்த உறவினன் விலக்கப்பட வேண்டியவனில்லை, மற்றும் எல்லா காரணங்களுக்காகவும், என்றென்றைக்குமாக அவன் அவளுக்கு தகுதியானவன் என்கிற அவள் தேகம் முழுக்கப் பரவியிருந்த அறுதிப்பாட்டிற்கு மேலாக இதைவிடக் கூடுதலாக சேர்த்து அதிகம் வேண்டும் என்று கேட்க வேறு எவரும் துணிய மாட்டார்கள். யாராலும் முடியாது, அதாவது, வெறி கொண்ட லியோனாரைத் தவிர்த்து.
சின்கோ தெ மாயோ வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்த செர்ஜியோவை ஒரு மதியநேரத்தில் அவள் எதிர்பாரதவிதமாகச் சந்தித்தாள். ஒவ்வொரு கையிலும் ஓரு குழந்தையை பிடித்தவண்ணம் சான்டோ தொபிங்கோ தேவாலயத்திலிருந்து அவள் வெளியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அந்த மாதத்தில் ஒவ்வொரு மதியங்களிலும் செய்து வந்ததைப் போல், மலர்அர்ச்சனை வேண்டுதலுக்காக அவர்களை அவள் அழைத்துச் சென்றிருந்தாள். அந்தப் பெண் குழந்தை சரிகைத்துணியும் மென்பருத்தியாலும் தயாரிக்கப்பட்டிருந்த நீண்ட உடையில் சிறிய வைக்கோல் மாலை மற்றும் பிரம்மாண்டமான பட்டு முகத்திரையோடு ஒரு ஐந்து வயது மணப்பெண் போன்றும், பையன் அவனது ஏழு வயதிலும் அவனைச் சங்கடமாக உணரச் செய்த ஒரு பெண்தனமான தேவாலய ஊழியனின் உடையிலும்.
“அந்த சனிக்கிழமை மட்டும் நீ உன் தாத்தாவின் வீட்டிலிருந்து ஓடிப்போயிருக்காவிட்டால், இந்த இருவரும் என்னுடையவர்களாக இருந்திருப்பார்கள்”,அவளை முத்தமிட்டபடி செர்ஜியோ சொன்னான்.
“நானும் அதே மனக்குறையோடுதான் வாழ்கிறேன்” ,லியோனர் அத்தை பதில் கூறினாள்.
இந்த பதில், அந்த நகரின் மிகத் தகுதியான பிரம்மச்சாரியை நிலைகுலையச் செய்தது. இருபத்தேழு வயதான, ஸ்பெயினிலிருந்து வெகுசமீபத்தில் திரும்பி வந்திருந்த- ஆலிவ் பயிர் வளர்ப்பில் மிகச் சிறந்த தொழில் நுட்பங்களை அங்கே அவன் கற்றிருந்ததாக சொல்லிக் கொண்டார்கள்- செர்ஜியோ, வெராக்ரூஸில் ஒன்றும் சான் மார்ட்டினில் ஒன்றும் மேலும் அசலானுக்கு அருகாமையில் ஒன்றுமாக பண்ணைகளுக்கு வாரிசாக இருந்தான்.
லியோனார் அத்தை, அவனது கண்களிலும், உதடுகளை ஈரப்படுத்திக் கொண்ட அவள் நாவிலும் தடுமாற்றத்தைக் கண்டாள், பின் அவன் பதில் சொல்வதைக் கேட்டாள்.
“மீண்டும் எல்லாமே மரம் ஏறுவதைப் போல இருந்தால்!”
பாட்டி வீடு நம்பர் 11,சுர் வீதியில் இருந்தது. அது மிகப் பெரிதாகவும், மூலைகளும், பிளவுகளும் நிறைந்தும் இருந்தது. ஐந்து கதவுகளைக் கொண்ட கீழ் தளம் ஒன்றைக் கொண்டிருந்தது அது. அங்கேதான் தாத்தா, மொட்டை மாடியில் கட்டப்பட்டிருந்த பொழுது போக்கு அறையில் நண்பர்களோடு பில்லியர்ட்ஸ் ஆடுவதற்கு பதிலாக, முதல் தளத்தின் அறைகளை கொஞ்ச நேரத்திற்கு மறக்கச் செய்த, தனது முகத்தில் அழுக்கேறச் செய்த பரிசோதனைகளில் மணிக்கணக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தை செலவிட்டார். பாட்டியின் வீடு, தோட்டத்தையும், ஆஷ் மரத்தையும், அவர்கள் எப்போதும் உருளைச் சருக்கு விளையாட்டை விளையாடவே பயன்படுத்திய ஒரு ஹாய் எலாய் மைதானத்தையும் பார்த்தபடி இருந்த ஒரு சிற்றுண்டி அருந்தும் அறையையும், ஒரு பெரிய பியானோ மற்றும் நீர்வற்றிய மீன் தொட்டி இருந்த ஒரு ரோஜா வண்ண முன்னறையையும், தாத்தாவிற்கு ஒன்றும், பாட்டிக்கு ஒன்றுமாக படுக்கையறைகளையும், சுவற்றின் வண்ணங்களைக் கொண்டு அறியப்பட்ட, முன்பு குழந்தைகளுடையவையாயிருந்த பல்வேறு விருந்தினர் அறைகளையும் கொண்டிருந்தது. தெளிவான சிந்தையோடு ஆனால் வாதத்தால் விறைத்துப் போயிருந்த பாட்டி, நீல அறையில் சித்திரம் தீட்டவென அமர்ந்திருந்தாள். அங்கே அவள் எப்போதும் பாதுகாத்து வைக்க விரும்பி தான் சேர்த்து வைத்த பழைய திருமண அழைப்பிதழ்களின் மேலுறையின் மேல் பென்சில் கொண்டு கோடுகள் வரைந்து கொண்டிருந்தாள். அவர்களுக்கு அவள் தித்திக்கும் திராட்சை சாறு ஒரு கோப்பை கொடுத்தாள், பிறகு பாலடைக்கட்டி, பிறகு பழைய சாக்லெட்டுகள். பாட்டியின் வீட்டில் எல்லாமே அப்படியே இருந்தன. சிறிது நேரம் சென்ற பிறகு வித்தியாசமாக இருந்த ஒரே ஒரு விஷயத்தைக் கவனித்தாள்
“பல வருடங்களாக உங்களை சேர்ந்தார் போல் பார்க்கவில்லையே நான்.”
“உடன் பிறந்தோரின் மக்கள் திருமணம் செய்து கொண்டால், முட்டாள் குழந்தைகள்தான் பிறக்கும் என்று நீங்கள் சொன்ன அந்தநாள் முதலாக பார்க்கவில்லை”, லியோனார் அத்தை பதில் சொன்னாள்.
பாட்டி புன்னகை செய்தாள், இதழ்கள் மீது இதழ்களாக இடைவெளியின்றியிருந்த ஒரு எல்லையற்ற பூவை அவள் வரைந்திருந்த தாளிற்கு மேலாக, நிச்சலனமாக.
“மெட்லெ(ர்) மரத்திலிருந்து இறங்கும் போது நீங்கள் உங்களைக் கிட்டத்தட்ட சாகடித்துக் கொண்ட சமயத்திலிருந்து இல்லை”, செர்ஜியோ சொன்னான்.
“மெட்லெர் கொய்வதில் நீங்கள் இருவரும் சாமார்த்திய சாலிகள். அதைச் சரிவரச் செய்யும் ஆட்கள் யாரையும் என்னால் தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை.”
“இப்போதும் நாங்கள் சமர்த்தர்கள்தான்”, லியோனார் அத்தை சொன்னாள், தனது கச்சிதமான இடுப்பை வளைத்து.
அவர்கள் நீல அறையை விட்டு வெளியேறினர். தமது ஆடைகளை ஏறக்குறைய முழுவதும் களைந்துவிட்டு, ஏதோ ஒரு மந்திரத்தால் கட்டுண்டு ஈர்க்கப்பட்டவர்கள் போல தோட்டத்திற்குச் சென்றனர். மூன்று மணி நேரம் கழிந்த பிறகு அவர்களது தேகத்தில் அமைதியோடும், மூன்று மெட்லெர் கிளைகளோடும் திரும்பினர்.
“எங்களுக்கு பயிற்சி விட்டுப் போயிற்று” லியோனார் அத்தை சொன்னாள்.
“திரும்பப் பெறுங்கள் அதை, திரும்பப் பெறுங்கள், ஏனென்றால் அவகாசம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது”, வாய் நிறைய மெட்லெர் கொட்டைகளோடு பாட்டி பதில் சொன்னாள்.